வுகான்:

சீனாவில் 90 ஆயிரம் பேருக்கு மேல் கோரோனா  வைரஸால் பாதிக்கப்பட்ட உள்ளதாக, அந்நாட்டு  செவிலியர்  ஒருவர் வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது. சீன அரசு நூற்றுக்கணக்கானோர் மட்டுமே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி வரும் நிலையில், நர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சீனாவின் வுகான் மாகாணம் உள்பட சில மாகாணங்கள் கோரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நிலையில், அந்த பகுதிகள் அனைத்தும், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆட்கொல்லி வைரஸ் நோய்க்கு இதுவரை 100க்கும் மேலோனோர் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் ‘whistleblower’  நர்ஸ் ஒருவர், நோய் தொற்று குறித்து அதிர்ச்சிகரமான தகவலை வீடியோவாக  வெளியிட்டுள்ளார்.

அவரது வீடியோவில், முகமூடி அணிந்து காணப்படும் அந்த நர்ஸ்,  கோரோனா வைரஸ் எங்கு கண்டறியப்பட் டதோ அந்த இடத்திலிருந்துதான் பேசுகிறேன். உங்களுக்கு உண்மையை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்… தான் சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் ஒரு மருத்துவமனையில் பணியாற்று வதாகவும் கோரோனா வைரஸ் தாக்குதலுக்கு 90 ஆயிரத்திற்கும் அதிக சீன மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

இந்த வைரஸ் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்? என்று கேள்வி எழுப்பி உள்ளவர்,   வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நபரை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் ஒரே சமயத்தில் 14 பேருக்கு இந்த வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது கடந்த 1975ம் ஆண்டு பரவிய தொற்றுநோயை விட அதிகமாக உள்ளது.

சீன மக்களுக்கு தற்போது  புத்தாண்டு பிறந்துள்ளது. சீன மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று புத்தாண்டு கொண்டாட விரும்புகின்றனர். ஆனால் நிலைமை தற்போது மோசமாக உள்ளது…

இந்த வீடியோவை பார்க்கும் நீங்கள் எங்கும் வெளியே செல்லாதீர். எந்த கொண்டாட்டங்களும் வேண்டாம். வெளியே விற்பனை செய்யப்படும் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். இப்போது பாதுகாப்பாக இருங்கள்.

ஆண்டுக்கு ஒரு முறை புத்தாண்டு வந்து கொண்டுதான் இருக்கும். அடுத்த முறை குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடிக் கொள்ளலாம். முதலில் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள்.

வுகான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு முகமூடி, முகக் கண்ணாடி, துணிகளை நன்கொடையாக வழங்குங்கள்.

கோரோனா வைரஸ் இரண்டாம் நிலைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. முதல் நிலையில் இருந்தால் குணப்படுத்திவிடலாம். ஆனால் இரண்டாம் நிலையில் மிகவும் கடினம் என அந்த செவிலியர் எச்சரித்துள்ளார். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.