கோவை: கோவையில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், இன்று முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  இதுவரை 26,19,511 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு 5,44,.648 ஆக அதிகரித்துள்ளது. கோவையில், இதுவரை 2,36, 721 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில், 2,32,311 பேர் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 2,276 பேர் உயிரிழந்துள்ளதுடன், தற்போது 2,134 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமாக கோவை திகழ்கிறது.

இதையடுத்து,  கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

கோவை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, அவினாசி சாலையில் ஹோப் காலேஜ் சிக்னல் கடைகள் , காளப்பட்டி சாலை (நேரு நகர்), டி.பி.சாலை, காந்திபுரம் 1 முதல் 11 வரையிலான தெருக்கள், சலீவன் வீதி ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், மளிகை கடைகள், காய்கறி கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டது.

கிராஸ்கட், ஒப்பணக்கார வீதி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அதிகளவில் ஜவுளி மற்றும் நகைக்கடைகள் உள்ளன. இந்த கடைகளும் இன்று மூடப்பட்டுள்ளது.

இதுதவிர மாவட்டத்தில் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் மால்களும் மூடப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள டீக்கடைகள் மற்றும் ஓட்டல்கள் கூடுதல் நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்பு காலை 8 மணி முதல் செயல்பட்டு வந்த ஓட்டல்கள், தேநீர்க்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க கூடுதல் நேரம் அனுமதிக்கப்படுகிறது.  மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் பொது போக்குவரத்து தொடர்ந்து இயங்கி வருகிறது.

கொரோனா  கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 32 டாஸ்மாக் மதுக்கடைகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.