இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவன தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை முறையான பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அவசரகால தேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

கோடிக்கணக்கானோருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் இல்லாததால் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களை எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று பல்வேறு நாடுகள் அறிவித்திருக்கின்றன.

பெரும்பாலானோருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே போடப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இன்னும் போடப்படவில்லை.

இந்நிலையில், வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் அடுத்த கல்வியாண்டு தொடங்க இருக்கும் நிலையில், அவர்கள் வெளிநாடு சென்று படிப்பை தொடர்வது கேள்விக்குறியாகி இருக்கிறது.

கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு இதுவரை அங்கீகரிக்க வில்லை. இந்த ஆண்டு ஜூலை அல்லது செப்டம்பர் மாதம் தான் கோவாக்சின் தடுப்பூசியை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பல்வேறு அமெரிக்க பல்கலைக்கழங்கள் கோவாக்சின் தவிர ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருப்பது மாணவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.