சென்னை: சென்னை உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அரசு அதிகாரிகளை கடுமையாக சாடி வருவதுடன், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 6 அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளது. இது அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபன்,  தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகள் அமுதா உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரிய நிலையில், தற்போது மற்றொரு வழக்கில்  உதயசந்திரன் ஐஏஎஸ் உள்பட 5 அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி,  தமிழ்நாடு அரசின் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் சி.சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்., நிதித்துறை செயலாளர் டி.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., வருவாய் நிர்வாகத்துறை முதன்மை கமிஷனர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ்., பள்ளிக்கல்வித்துறை இயக் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், வணிகவரித்துறை கமிஷனர் டி.ஜெகன்நாதன் ஐ.ஏ.எஸ்., கருவூலம் மற்றும் கணக்குத்துறை கமிஷனர் கிருஷ்ணன் உன்னி ஐ.ஏ.எஸ்.,  உள்பட 6 அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராக  உத்தரவிட்ட நீதிபதிகள்,   ஆகஸ்டு 4-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

தமிழ்நாடு அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 1991-ம் ஆண்டு பலரை வேலையில் அமர்த்தியது. பின்னர், அவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு நிர்வாக பணியாளர் தீர்ப்பாயத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு மாற்று பணி வழங்க அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

அதன்படி,  சேக்அப்துல்காதர், எல்.அழகேசன், பி.சர்மிளா பேகம் உள்பட 16 பேருக்கு வணிக வரித்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. இவர்கள் பணியை கடந்த 2004-ம் ஆண்டு முதல் வரையறை செய்து கடந்த 2010-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால், இவர்களது பெயர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டன.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சர்மிளா பேகம் உள்ளிட்ட 16 பேர் வழக்கு தொடர்ந்தனர். அதில், ”எங்களுக்கு பணி வழங்க உச்சநீதிமன்றம்  1999-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, எங்களது பணி 1996-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி முதல் கணக்கிட வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு அந்த உத்தரவை காலதாமதமாக நிறைவேற்றி, எங்களது பெயரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க முடியாது” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, ”உச்சநீதிமற் உத்தரவின்படி, மனுதாரர்களை 1996-ம் ஆண்டு பணிவரையறை செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தின் பெயர்களை சேர்க்க வேண்டும்” என்று கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு அமல்படுத்தவில்லை. இதையடுத்து, மனுதாரர்கள் சென்னை ஐகோர்ட்டில், பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் சி.சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்., நிதித்துறை செயலாளர் டி.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., வருவாய் நிர்வாகத்துறை முதன்மை கமிஷனர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ்., பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், வணிகவரித்துறை கமிஷனர் டி.ஜெகன்நாதன் ஐ.ஏ.எஸ்., கருவூலம் மற்றும் கணக்குத்துறை கமிஷனர் கிருஷ்ணன் உன்னி ஐ.ஏ.எஸ்., ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு விசாரணையைத் தொடர்ந்து,  நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத  பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட 6 அதிகாரிகளையும் வருகிற ஆகஸ்டு 4-ந்தேதி நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.