சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, தமிழக அமைச்சர் மற்றும் திமுக எம்.பி.க்கள் கொண்ட குழு ஒடிசா உள்பட அண்டை மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள அரசியல் கட்சி தலைவர் களை சந்தித்து ஆதரவு கோருகிறது.

மாநிலத்தின் ஜனத்தொகைக்கு ஏற்ப தொகுதிகள் வரையறுக்கப்படுகிறது. இது 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2026ம் ஆண்டு மீண்டும் தொகுதி மறுவரை செய்யப்பட உள்ளது. இதனால், தமிழ்நாட்டுக்கு பாதிப்பு என கூறி திமுக அரசு, போர்க்கொடி தூக்கி உள்ளது.
மார்ச் 5ந்தேதி அன்று இதுகுறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது. இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தொகுதிகள் மறுசீரமைப்பால் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து ‘கூட்டு நடவடிக்கை குழு’ அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் மார்ச் 22 ஆம் தேதி நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரளா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அமைச்சர்கள் குழு அந்த ஏழு மாநிலங்களுக்கு நேரடியாக சென்று அங்குள்ள முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சந்தித்து 22 ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் வழங்க முடிவெடுத்தனர்.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அங்கு நேரில் சென்று, அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுகின்றனர்.
நாளை (மார்ச்.12) வனத்துறை அமைச்சர் பொன்முடி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா கர்நாடகா மாநிலம் செல்கின்றனர்.
நாளை மறுதினம் (மார்ச் 13 ஆம் தேதி) நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இளங்கோ தெலங்கானா சென்று அங்குள்ள முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர்.