டெல்லி: கோபால் கண்டா போன்ற கிரிமினலுடன் கைகோர்ப்பது பெண்கள் பாதுகாப்பு குறித்த பாஜகவின் கோட்பாட்டை கேள்விக்குறியாக்கி இருப்பதாக அமித் ஷாவுக்கு, காங்கிரசின் மகளிர் தலைவர் சுஷ்மிதா தேவ் கடிதம் எழுதி இருக்கிறார்.

அரியானாவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளில் அதி தீவிரமாக இறங்கியுள்ளது. மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரும், மனோகர்லால் கட்டார், டெல்லி சென்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்தார்.

சுயேச்சைகளும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் 4 பேர் பாஜகவில் சீட் கிடைக்காத காரணத்தினால், அக்கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்டு ஜெயித்தவர்கள் ஆவர்.

பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக அரியானா லோகித் கட்சியின் ஒற்றை எம்எல்ஏ கோபால் கண்டா தெரிவித்துள்ளார். ஆனால் இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது.

பாஜக முகாமில் மட்டுமல்ல, காங்கிரஸ் முகாமிலும் பலத்த கேள்விகள் எழுந்திருக்கின்றன. ஒரு கட்டத்தில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்றையே எழுதி விட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: கோபால் கண்டா மீது பாலியல் பலாத்காரம், தற்கொலைக்கு தூண்டுதல், தற்கொலை வழக்கில் கிரிமினல் சதி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரைப் போன்ற குற்றவாளிகளுடனான கூட்டணி வைத்து, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்பது பாஜகவின் தீர்மானத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது என்று கூறியிருக்கிறார்.