டெல்லி: லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை பாஜக அரசு புறக்கணிப்பது ஏன்? என நீட் தேர்வு முறைகேடு குறித்து பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டு புதிய தேர்வு நடத்த மாணவர்கள் வலியுறுத்தல். நாடு முழுவதும் 67 பேர் நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். பல இடங்களில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி மாணவர்கள் பிடிபட்டனர். இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத் தாள் கசிந்தது, தற்போது நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருவது, நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் பெற்றிருப்பது உள்ளிட்டவை நீட் தேர்வு முறை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. “இதன் மூலம் நீட் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை பாஜக அரசு புறக்கணிப்பது ஏன்?; நீட் தேர்வு முடிவுகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பான மாணவர்களின் கேள்விகளுக்கு பாஜக அரசு பதிலளிக்க வேண்டும்;

நீட் தேர்வு முறைகேடு புகார்களை விசாரித்து தீர்வு காண்பது பாஜக அரசின் பொறுப்பு”

மறுபுறம், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் உயிரை மாய்த்துக் கொண்டதாக வெளிவரும் செய்திகள் மிகவும் வருத்தமளிக்கிறது

இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.