சென்னை: ஆன்லைனில் பாடங்களை நடத்திவிட்டு, நேரடி தேர்வுகளை நடத்தக்கூடாது என்றும், ஆன்லைனிலேதான் தேர்வுகளை நடத்த வேண் டும் என மதுரை, சென்னை உள்பட பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், பொங்கலுக்கு பிறகுதான் (ஜனவரி 20ந்தேதிக்கு) நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.

கொரோனா கால கட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு, ஆன்லைனில் தேர்வுகளும் நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கல்லூரிகளில் முழுமையாக வகுப்புகள் நடத்தப்படாமல் வாரத்திற்கு ஒரு நாள் என  வகுப்புகள் திறக்கப்பட்டு  நடைபெற்று வருகிறது. மற்ற சமயங்களில் ஆன்லைன் மூலமே நடைபெறுகிறது. ஆனால், கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, அவை நேரடியாக கல்லூரிகளுக்கு வந்து எழுத வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். முதன்முதலாக மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தொடங்கிய நிலையில், செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்த உயர்கல்வித்துறை, கண்டிப்பாக நேரடித்தேர்வுதான் நடைபெறும் என இரு வாரம் அவகாசம் வழங்கி மீண்டும் தேர்வு தேதியை அறிவித்தது.

ஆனால், ஆன்லைன் தேர்வை வலியுறுத்திய நடைபெற்ற மாணவர்களின் போராட்டம்  மதுரை மட்டுமின்றி சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவியது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.  மேலும், சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த சில மாணவர்கள் குழுக்கள் அழைப்பு விடுத்தன. இதனால், மாணவர்களின் போராட்டம் தீவிரமடையும் என்பதால், தமிழகஅரசு இறங்கி வந்தது.

இதையடுத்து, நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில், அதிகாரிகள், மாணவர்கள் குழுவினர் இடையே பேச்சுவார்த்தை நடைற்றது. அப்போது, ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஜனவரி 20-ஆம் தேதிக்கு பிறகு நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும்,  போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களின் மீதான வழக்கும் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் தேர்வுக்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டு நிலைக்கு அரசு இரண்டு மாதம் அவகாசம் அளித்து ஜனவரி 20 க்கு பின் தேர்வு நடைபெற உள்ளது என கூறினார்.

மாணவர்களின் மெரினா போராட்ட அறிவிப்புக்கு பணிந்துவிட்டதோ திமுக அரசு…