கோவையில் பிரியாணி போட்டி நடத்திய உணவகத்தின் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள போஃச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் ரயில் வடிவ உணவகத்தின் சார்பாக கடந்த புதன்கிழமை பிரியாணி போட்டி ஒன்று நடத்தப்பட்டது.

ஆறு பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு, ஐந்து பிரியாணி சாப்பிட்டால் 50 ஆயிரம் பரிசு, மூன்று பிரியாணி சாப்பிட்டால் 25 ஆயிரம் பரிசும், என விளம்பரப்படுத்தப்பட்டது.

இந்த பிரியாணி போட்டியில் பங்கேற்பதற்காக கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் வழக்கமாக மலபார் பிரியாணி மட்டுமே சாப்பிட்டு பழக்கப்பட்ட பிரியாணி பிரியர்கள் பலரும் இந்தப் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை மாநகர கண்காணிப்பாளர் அலுவலகம், கோவை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகம் ஆகிய இடங்களை இணைக்கக் கூடிய கோவை மாநகரின் முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று போக்குவரத்து போலீசார் அனுமதியின்றி நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.

மேலும், பந்தைய சாலை காவல் நிலைய ஆய்வாளரின் புகாரின் அடிப்படையில் எவ்வித முன் அனுமதி இன்றி பொது இடத்தில் பொது மக்களை கூட்டி போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக பிரியாணி போட்டி நடத்திய போச்சே புட் எக்ஸ்பிரஸ் உணவகத்தின் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.