ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஜோச்சேன் செங்பீஹல் சீனாவில் தடை செய்யப்பட்ட போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்டுள்ளார்.

சீனாவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் பணிபுரியும் செங்பீஹல் கடந்த சில நாட்களுக்கு முன் தாய்லாந்தின் கோ சாமுய்யில் என்ற இடத்திற்கு விடுமுறைக்காக சென்றுள்ளார்.

அங்கு தடையின்றி கிடைக்கும் போதை மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்ட செங்பீஹல் தனது விடுமுறை முடிந்ததும் சீனா திரும்பினார்.

தாய்லாந்து அதிகாரிகள் மூலம் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து ஜோச்சேன் செங்பீஹலிடம் சோதனை நடத்திய அதிகாரிகள் கோக்கைன், கஞ்சா போன்ற எந்த ஒரு தடைசெய்யப்பட்ட போதை மருந்தையும் அவர் கொண்டுவர வில்லை என்பதை உறுதி செய்தனர்.

இருந்தபோதும் அவரிடம் நடத்திய ஊக்கமருந்து சோதனையில் அவர் ஏற்கனவே போதை மருந்து பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜோச்சேன் செங்பீஹலை மீட்க சீனாவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஜெர்மனி தூதரகம் தொடர் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்டு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவர் 10 நாள் காவலில் இருந்த நிலையில் அவரை தற்போது நாடு கடத்துவதாக சீனா அறிவித்துள்ளது.

விடுமுறையில் தாய்லாந்தில் பொழுபோக்கிய ஃபோக்ஸ்வேகன் அதிகாரி ஊக்கமருந்து ஓவர் டோஸ் ஆனதில் சீனாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் அந்நிறுவனத்தில் அவர் தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்கப்படுவாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.