சென்னை: திமுக நடத்தி வரும் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரிலான, கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 ஏழை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ. 2 லட்சம் உதவிநிதி வழங்கினார்.

கலைஞர் அறக்கட்டளையை தொடங்கிய மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு நிதி உதவி வழங்கிப்பட்டு வருகிறது. இந்த உதவி திட்டம் 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
இடையில் வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 30வது புத்தகக் கண்காட்சியினை 10.1.2007 அன்று திறந்து வைத்து தலைவர் கலைஞர் பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள நான்கு கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.6 கோடியே 27 லட்சத்து 90 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2,00,000/- (இரண்டு லட்சம்) 08-07-2025 அன்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.
