மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய முதல்வர் ஸ்டாலின் மாவட்டத்திற்கு ரூ.162 கோடி மதிப்பிலான 8 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.48.17 கோடி மதிப்பிலான 47 பணிகளை திறந்து வைத்து, ரூ.113.51 கோடி மதிப்பிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ. 162 கோடி மதிப்பில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான எட்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

1. மயிலாடுதுறை பகுதியில் சீரான வாகன போக்குவரத்தை உறுதி செய்ய நீடூர் ஊராட்சியில் ரூ. 85 கோடி செலவில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
2. சுற்றுலா பயணிகள் அதிகமாக பயன்படுத்துகிற தரங்கம்பாடி – நங்கநல்லூர், ஆடுதுறை சாலை ரூ. 45 கோடி மதிப்பீட்டில் இருவழிச் சாலையாக மேம்படுத்தப்படும்.
3. தென் ஆப்பிரிக்காவில் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் கலந்து கொண்டு உயர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட தியாகி சாமி நாகப்பனுக்கு, அவர் நினைவாக அவரைப் போற்றக்கூடிய வகையில் மயிலாடுதுறையில் அவருடைய திருவுருவச் சிலை அரசால் நிறுவப்படும்.
4. குற்றால வாய்க்கால் ரூ.7 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
5. தரங்கம்பாடி வட்டத்தில் இருக்கக்கூடிய தாழம்பேட்டை, வெள்ளகோவில் ஆகிய 2 கிராமங்களில் கடற்கரை ஓர கட்டமைப்பு வசதிகள் ரூ. 8 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
6. சீர்காழி நகராட்சிக்கு ரூ.5 கோடி செலவில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டி தரப்படும்.
7. சீர்காழி நகராட்சியில் இருக்கக்கூடிய தேர் வரும் கீழ வீதி, மேல வீதி தெற்கு வீதி மற்றும் வடக்கு வீதி ஆகிய இடங்களில் இருபுறமும் மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை மேம்பாட்டு பணிகள் ரூ. 8 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
7. மீனவர்களை பொறுத்தவரையில் சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் மீனவ கீராமத்திலே மேற்கில் சுவர் நீட்டிப்பு மற்றும் தூர்வாறும் பணி மேற்கொள்வது குறித்து சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் முதலில் ஆய்வு மேற்கொள்ள துறை அமைச்சருடைய அறிவிப்பின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆய்வின் அடிப்படையில் இந்த மேம்பாட்டு பணிகள் நிச்சயம் மேற்கொள்ளப்படும். பூம்புகார் துறைமுகத்தில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் தூர்வாரம் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த அறிவிப்புகள் அனைத்தும் நிச்சயம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும்”
இவ்வாறு கூறினார்.