தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட்டில் அமைந்துள்ள வியட்நாமைச் சேர்ந்த  வின்ஃபாஸ்ட் மின்சார கார் தயாரிப்பு  ஆலையை இன்று  திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் , அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடியில் தயாரிக்கப்பட்ட முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையையும்  தொடங்கி வைத்தார்.

மின்சார கார் தயாரிப்பில்,   உலகில் நம்பர் ஒன் நிறுவனமான வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின்சார கார் தயாரிப்பு நிறுவனம், தமிழ்நாட்டில், தூத்துக்குடியில் மின்சார கார் தயாரிக்ககும்  தொழிற்சாலையை உருவாக்கி உள்ளது. முன்னதாக, இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் போட்டது. அதன்படி,   ரூ.16 கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில்   தூத்துக்குடி -மதுரை புறவழிச்சாலையில் உள்ள ஓட்டப்பிடாரம் பகுதிக்கு உட்பட்ட 408 ஏக்கர் பரப்பளவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு முதற்கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இங்கு  2 பணிமனைகள், 2 கிடங்குகள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. மின்சார கார் உற்பத்தி ஆலையில் வி.எப் 6, வி.எப் 7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.  இங்கு ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் மின்சார கார் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த  கார் தொழிற்சாலைக்கு   கடந்த ஆண்டு  (2024) பிப்ரவரி மாதம்   முதலமைச்சர் அடிக்கல் நாட்டியிருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில்,  வின்ஃபாஸ்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு விற்பனையை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, எம்.பி. கனிமொழியுடன் சென்று ஆலையை சுற்றிப்பார்த்தார்.

இதையடுத்து முதலமைச்சர் திருச்செந்தூரில் அமைந்துள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். அதில், ரூ.32,000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது.