சென்னை: தாளமுத்து – நடராசன் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். இதன் காரணமாக வடசென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏற்கனவே மெட்ரோ பணி, கணேசபுரம் ரயில்வே மேம்பாலம் போன்ற காரணமாக வடசென்னையின் பெரும்பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று காலை முதல்வரின் பயணம் காரணமாக, போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டதால் பணிக்கு செல்ல இருந்த வடசென்னை மக்கள் கடுமையான அவதியடைந்தனர்.

முதல்வர் வருகைக்காக சுமார் 1மணி நேரம் வரை புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ், மின் பகுதி, ஸ்டாலின் ஏரியா, பாரிமுனை உள்பட பல பகுதிகளில் போக்குவரத்தை காவல்துறையினர் நிறுத்தியதால், சாலை முழுவதும் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் பணிக்கு செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் இருந்து இறங்கி ரயில்களை பிடிக்க அவசரம் அவசரமாக ஒடிய அவலம் காணப்பட்டது.
முதல்வரின் இதுபோன்ற நிகழ்ச்சிகள் குறித்துமுன்கூட்டியே முறையான அறிவிப்பு வெளியிட்டிருந்தால், பணிக்கு செல்லும் மக்கள் வாகன நெரிசலில் சிக்காமல் மாற்றுவழியை தேர்ந்தெடுத்திருப்பார்கள். அதுபோல ஷேர் ஆட்டோவும் மாற்று வழியாக இயக்கப்பட்டிக்குங்ம. ஆனால், திடீரென முதல்வர் வருகை என கூறி போக்குவரத்தை நிறுத்திவைத்தது மக்களிடைய கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. இனிமேலாவது காவல்துறையினர், இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாதவாறு, யோசித்து செயல்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்தி எதிர்ப்பு போரில் சிறை சென்று உயிர் நீத்த தாளமுத்து மற்றும் நடராசனின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் நினைவிடங்கள் ரூ.34.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், அதை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கடந்த 1938ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி தொடங்கிய மொழிப்போர் ஒன்றரை ஆண்டுக்காலம் தொடர்ந்து நடந்தது. இதில் மாணவர்கள் பலரும் பங்கு கொண்டனர். பல்லாயிரம் பேர் சிறை சென்றனர். சென்னை அடையார், தியாசபிகல் பள்ளி முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சென்னை, பெரம்பூர் பண்ணைக்கார ஆண்டியப்பன் தெருவில் வசித்துவந்த லட்சுமணன்-அம்மாக்கண்ணு இணையருக்கு 1919ம் ஆண்டு பிறந்த நடராசன் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டார். அவருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் சிறையில் நோயால் பல நாட்கள் அவதிப்பட்ட அவர்,10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் 1939ம் ஆண்டு ஜன.15ம் தேதி தமிழுக்காக தன்னை முதற்பலியாக்கி கொண்டார்.
குமாரராஜா முத்தையா செட்டியார் விருப்பப்படி மருத்துவமனையிலிருந்து தன்னுடைய உடல் மேல் கறுப்புக் கொடி போர்த்தி பெரும் ஊர்வலமாக நடராசனின் பூதவுடல் எடுத்து செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் அண்ணா, தர்மாம்பாள், அ. பொன்னம்பலம், கு.மு.அண்ணல் தங்கோ. ஆல்பர்ட் ஜேசுதாசன், நாராயணி அம்மையார் முதலானோர் புகழுரையாற்றினர். நடராசனின் இழப்பு, மேலும் பலரையும் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தது.
பள்ளிகளில் கட்டாய இந்திக்கு எதிரான மொழி போராட்டத்தில் உயிர் நீத்த நடராசனுக்கு அடுத்து, இரண்டு மாதங்களில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த வேல்முருகன்-மீனாட்சி இணையருக்கு பிறந்த தாளமுத்து என்ற இளைஞரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்னின்று மறியல் செய்ததற்காக 6 மாத கடுங்காவல் பெற்று சிறைப்பட்ட 3 வாரங்களுக்குள் கடந்த 1939ம் ஆண்டு மார்ச்.11ம் தேதி உயிரிழந்தார். மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த நடராசன் – தாளமுத்து இருவரும் தமிழுணர்வு கொண்டோரின் மனத்தில் நீங்கா இடம் பெற்று இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள்.
அந்தவகையில், இந்தி எதிர்ப்பு போரில் சிறை சென்று உயிர் நீத்த தோழர்கள் நடராசன் – தாளமுத்து ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் நினைவிடத்தை சென்னை, மூலக்கொத்தளத்தில் பெரியார் திறந்து வைத்தார்.இந்த நினைவிடத்தினை பொலிவேற்றம் செய்திடவும், ஜனவரி 25 தினத்தை தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாள் என்னும் பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்தது. அதன்படி, இன்று பொலிவேற்றம் செய்யப்பட்ட நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் உருவப் படத்துக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரவணக்கம் செய்தார். மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த நடராசன் – தாளமுத்து இருவரும் தமிழுணர்வு கொண்டோரின் மனத்தில் நீங்கா இடம் பெற்று இன்றும் நினைவு கூரப்படுகிறார்கள்.