சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களுக்கான வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்படி, ,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 17 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 198 வாகனங்களை வாங்கப்பட்டு உள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களுக்கான 198 வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.7.2025) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 17 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 198 வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்கல், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள், உணவு கிடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்தி, புதிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அதனை திறம்பட செயல்படுத்தி, தமிழ்நாடு அரசு நாட்டிலேயே முன்னோடியாக விளங்கி வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் செயல்படுத்தப்படும் பணிகளின் தரத்தை கண்காணிக்கவும், உரிய காலத்தில் முடித்திடுவதை உறுதி செய்யவும, கள ஆய்வு மேற்கொள்ளவும் பணிகளை திறம்பட கண்காணிக்க ஏதுவாகவும், துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2025-26 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 17 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 198 வாகனங்களை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் கொடியசைத்து தொடங்கி வைத்து, அலுவலர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார்.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக மொத்தம் 109 கோடியே 91 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 1018 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம்,இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி,இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் பா.பொன்னையா,இ.ஆ.ப மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.