சென்னை: ”தமிழ்நாட்டின் தலைமை ஆசிரியர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”  என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஸ் புகழாரம் சூட்டினார்.

ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இன்று ஐம்பெரும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளை தொடங்கி வைத்தார்.

மேலும் ரூ.101.48 கோடி மதிப்பீட்டில் 79,723 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகள், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவியர், 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தமிழ்ப் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இந்த விழாவில் வாழ்த்தி பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ,  அரசியலில் 100க்கு100 பெற்று தமிழ்நாட்டின் தலைமை ஆசிரியராக திகழ்பவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசியவர்,   “தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் நமது அரசு பள்ளி மாணவர்கள் சாதித்து வருகின்றனர். 95 பேர் தங்கம், 112 பேர் வெள்ளி, 222 பேர் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களை தம் குழந்தைகள்போல் பார்ப்பவர் நமது முதலமைச்சர். இன்று 1828 அரசு பள்ளிகள் 100க்கு100 தேர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல் அரசியலில் 100க்கு100 பெற்று தமிழ்நாட்டின் தலைமை ஆசிரியராக திகழ்பவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.” என  கூறினார்.