பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்தில் ஈஸ்ட் பெங்கால் அணிக்கெதிரான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது சென்னை அணி.

ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனின் லீக் போட்டியொன்றில், சென்னை – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. ஈஸ்ட் பெங்கால் அணி இந்த சீசனில்தான் புதிதாக தொடரில் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் 13வது நிமிடத்தில், சென்னை அணியின் லாலியன்ஜுவாலா ஒரு கோலடித்து தனது அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தார். இந்நிலையில், முதல் பாதி முடிவில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில், 59வது நிமிடத்தில், ஈஸ்ட் பெங்கால் அணியின் ஸ்டெய்ன்மேன் ஒரு கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார். ஆனால், 64வது நிமிடத்தில் சென்னை அணியின் ரஹிம் ஒரு கோலடித்து தனது அணியை மீண்டும் முன்னிலை பெறச்செய்தார்.

அதேசமயம், இதற்கு சளைக்காத ஈஸ்ட் பெங்கால் அணியின் ஸ்டெய்ன்மேன் மீண்டும் ஒரு கோலடிக்க, ஆட்டம் மீண்டும் சமன் ஆனது.

கடைசி நிமிடங்களில், இரு அணியினரும் வெற்றிக்கான கோலடிக்க முயன்றாலும் எதுவும் நடக்கவில்லை. இதனால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.