சென்னை

சென்னை வேப்பேரியில் உள்ள பாலிடெக்னிக் விடுதி கேண்டீனில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் கேண்டீன் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள வேப்பேரியில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி செயல்படுகிறது. இங்குள்ள விடுதி கேண்டீனில் உணவு தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும், இதனை சாப்பிட்ட மாணவர்களுக்கு கடந்த 2 நாட்களாக வாந்தி – பேதி உள்ளிட்ட உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகவும் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.

எனவே உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் விடுதிக்கு சென்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது கேண்டீனில் உள்ள உபகரணங்கள் சுகாதாரமின்றி இருந்ததும், உணவுகள் தரமற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு கேண்டீன் உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டது.