சென்னை

சென்னை நகரில் கள்ளச்சாராயம் கஞ்சா உள்ளிட்டவை விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க காவல்துறை எண்களை அறிவித்துள்ளது.

இன்று சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs – DAD) மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குடகா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP), கள்ளச்சாராயம், மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கீழ்க்கண்ட செல்போன் எண்களைத் தொடர்பு கொண்டும், வாட்ஸ் அப் (Whats app) மூலமாகவும் மற்றும் குறுஞ்செய்தி (SMS) வாயிலாகவும் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெருநகரில் ஆங்காங்கே காவல்துறை சார்பாகப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் கொடுக்கும் பொதுமக்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள்

• மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வடக்கு மண்டலம் (PEW North) (பூக்கடை, வண்ணாரப் பேட்டை, புளியந்தோப்பு காவல் மாவட்டங்கள்) செல்பேசி எண்-80728 64204.

• மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மேற்கு மண்டலம் (PEW West) (அண்ணாநகர், கொளத்தூர், கோயம்பேடு காவல் மாவட்டங்கள்) செல்பேசி எண்- 90423-80581.

• மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தெற்கு மண்டலம் (PEW South) (அடையார், புனித தோமையர் மலை தி.நகர் காவல் மாவட்டங்கள்) செல்பேசி எண் – 90424-75097.

• மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கிழக்கு மண்டலம் (PEW East) (திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், மைலாப்பூர் காவல் மாவட்டங்கள்) செல்பேசி எண்-63823-18480.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.