சென்னை

சென்னையில் இன்று நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு போதுமான அளவு ரயில்கள் விடாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு இன்று இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.  இன்று ஞாயிற்று கிழமை என்பதால் மெரினாவில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

விமானப்படை சாகச நிகழ்ச்சி நிறைவடைந்து ஒரே நேரத்தில் லட்ச கணக்கில் மக்கள் வீடுகளுக்கு திரும்ப முயற்சித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  மெரினா கடற்கரை சாலை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை, அடையாறு மேம்பாலம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இன்று போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும் புறநகர் ரயில்களும் குறைவான அளவில் இயக்கப்பட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டினர். குறிப்பாக வேளச்சேரி – சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ரயில் சேவை இன்று ஞாயிற்றுகிழமை அட்டவணையில் ரயில்கள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகிறது.