சென்னை:  சென்னைவாசிகளின் பேராதரவு பெற்ற மெட்ரோ ரயிலின்  2-ம் கட்ட மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான ரயில்கள் அடுத்த மாதம் சென்னை வர உள்ளது.

இதையடுத்து இந்த வருட இறுதியில்  சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, அது வெற்றி அடைந்ததும், நிரந்தரமாக இயக்கப்பட இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சென்னை மக்களின் பேராதாரவு பெற்ற மெட்ரோ ரயில் பணிகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. ததற்போது,  சென்னை சென்ட்ரல்,  விமானநிலையம்-விம்கோ நகா், சென்னை சென்டிரல் – பரங்கிமலை என 2 வழித்தடங்களில், 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து, 2-ம் கட்டமாக ரூ,63 ஆயிரத்து 246 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், மாதவரம்- சிறுசேரி சிப்காட் வரையில் 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பைபாஸ் வரையில் 4-வது வழித்தடத்திலும், மாதவரம்- சோழிங்கநல்லூா் வரையில் 5-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்தே வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்கள் இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்காக,  டிரைவர் இல்லாத 62 மெட்ரோ ரெயில்கள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில்  உள்ள பணிமனையில் பணிகள் நடந்து வருகிறது.

முதற்கட்டமாக 3 பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் அடுத்த மாதம் (செப்டம்பர்) சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.   இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 3 பெட்டிகளை கொண்ட முதல் ரெயில் செப்டம்பர் மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

இந்த ரயிலின் பெட்டிகள் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் 1000 பேர் பயணம் செய்யும் வகையிலும், அதனுடன் செல்போன் மற்றும் கம்யூட்டர்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியும் இடம்பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி   பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்யேக இடங்களும் அமைக்கப்படுகிறது. இந்த ரெயில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் இயக்கப்படும்என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ள தண்டவாளங்களில் ரெயில் இயக்கம் குறித்த அதிநவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளது. கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித் தடத்தில் பூந்தமல்லி – கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரையிலான உயர்மட்டப் பாதையில் ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் சோதனை ஓட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது  என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.