சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் இது யூடியூப் சேனல்களைக் கட்டுப்படுத்த சரியான நேரம் எனத் தெரிவித்துள்ளது.

கடந்த 4 ஆம் தேதி காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூ-டியூபர் சவுக்கு சங்கர் தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ட்கபோது கஞ்சா வைத்திருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.

சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  மேலும் சவுக்கு சங்கரின் நேர்க்காணலை ஒளிபரப்பிய தனியார் யூ-டியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் யூ-டியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் முன் ஜாமீன் கேட்டு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது,

“யூ-டியூப் சேனல்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒழுங்கற்று செயல்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது. நேர்காணல் அளிக்க வருபவர்களை அவதூறான கருத்துக்களை தெரிவிக்க தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்”

என்று நீதிபதி தெரிவித்தார்.

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முன் ஜாமீன் வழங்குவது குறித்து ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டார்.