சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2001ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த வழக்கறிஞர்கள் நல நிதி சட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிய மனுவை விசாரித்தது. இந்த சட்டம் இளம் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க குறைந்தபட்ச உதவித்தொகையை நிர்ணயிக்க வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு வலியுறுத்தியது.

நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் சங்கங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.கே. சந்திரசேகர், ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க சம்மதிப்பதாகவும், அதற்கான சுற்றறிக்கையை வெளியிட 2 மாதங்கள் தேவைப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நீதிபதிகள்,

”முந்தைய தலைமுறையினர் சந்தித்த போராட்டங்களை இளம் வழக்கறிஞர்கள் சந்திக்கும் நிலையை ஏற்படுத்தக் கூடாது. இளம் வழக்கறிஞர்களுக்கு வலுவான இடத்தை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும். ஒரு இளம் வழக்கறிஞராக துன்பப்படுவது வழக்கறிஞர் தொழிலின் ஒரு பகுதியாக பார்க்க முடியாது. இளம் வழக்கறிஞர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

சென்னை, மதுரை, கோவை போன்ற பெருமாநகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.20,000 உதவித்தொகையும், பிற மாவட்டங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ. 15,000 உதவித்தொகையும் வழங்க வேண்டும். பாலின பாகுபாடு பாராமல் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். நான்கு வாரங்களுக்குள் சுற்றறிக்கையை வெளியிட்டு, உறுதி செய்யவேண்டும்”

என்று உத்தரவிட்டுள்ளனர்.