சென்னை

ஜாபர் சாதிக் தன்னை சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த மார்ச் 9 ஆம் தேதி போதைப் பொருளை கடத்தல் வழக்கில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கிலும், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.

தனது கைதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற்த்தில் ஜாபர் சாதிக் வழக்கு தொடர்ந்தார்.  அவர் ”போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் வழங்கப்பட்ட சிறை மாற்ற உத்தரவின் அடிப்படையில் தன்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தது சட்டவிரோதம்” எனக் கூறியிருந்தார்.

நேற்று வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, “ஜாமீனில் விடுதலையான நபரை சட்டவிரோதமாக சிறையில் வைத்து கோர்ட்டு காவலில் அடைக்க பிறப்பித்த உத்தரவு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. சட்டவிரோதமானது” என்று வாதிட்டார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்கரிஞர் என்.ரமேஷ், “ஜாமீன் வழங்கப்பட்டு பிறகும் வெளியே விடாமல் சிறையில் வைத்திருந்ததற்காக வேண்டுமானால் திகார் சிறை நிர்வாகம் மீது மனுதாரர் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாமே தவிர, அதற்காக சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் அவரை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்தும் செய்ய முடியாது” என்று வாதிட்டார்.

நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டபின்பு,

“ஜாமீன் கிடைத்த பின்னரும், ஜாபர் சாதிக்கை வெளியில் விடாமல் சிறையில் வைத்திருந்தது சட்டவிரோதம். அதற்காக தனியாக நிவாரணம் கேட்டு வழக்கு தொடரலாம்”

என்று தெரிவித்ததுடன் தன்னை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.