சென்னை

மிழக அரசு சட்ட விரோதமாக வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் வைக்கமால் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுத்தது என உயர்நீதிமன்றம் வினா எழுப்பி உள்ளது.

டிராபிக் ராமசாமி சட்ட விரோதமாக விளம்பரப் பலகைகள் வைத்தது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும் விழுப்புரத்தில் தி.மு.க. நிர்வாகியின் வீட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று கொடிக் கம்பம் நாட்டிய போது 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான  வழக்கு நிலுவையில் உள்ளன.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குகளைத் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையில் தமிழக அரசு தரப்பில், சட்ட விரோதமாக விளம்பரப் பலகைகள் வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள்,இதைப் பதிவு செய்தனர்.  பிறகு நீதிபதிகள்  விபத்து நடந்த பிறகு விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட, சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பதைத் தடுப்பது முக்கியமானது என்று தெரிவித்தனர்.

மாநில அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் சட்ட விரோதமாக விளம்பரப் பலகைகள் வைப்பது தொடர்பாக, இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.