சென்னை: சென்னை சென்ட்ரல் பகுதியில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் சென்ட்ரல் கோபுரம் அமைக்க தமிழ்நாடு அரசுடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது.
சென்னை சென்ட்ரல் கோபுரத்தின் மேம்பாட்டிற்கான கட்டுமானம், கட்டிடக்கலை, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் பணிகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் பணிகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO) இடையே ரூ.350 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO) இணைந்து உருவாக்கிய சிறப்பு நோக்கத்திற்கான நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் (CMAML), பிரபலமான சென்னை சென்ட்ரல் கோபுரத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் Renaatus Projects Private நிறுவனத்திற்கு ரூ. 349.99 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பு கடிதம் (LOA) 12.12.2024 அன்று வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் எம்.ஏ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் / சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் Renaatus Projects Private நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எஸ்.மனோஜ் பூசப்பன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ஜி.தணிகைசெல்வன் (திட்ட மேலாளர்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். சென்னை சென்ட்ரல் கோபுரம் உலகளாவிய பெருநகரமாகவும், பன்முக போக்குவரத்து மையமாகவும் மாறுவதை குறிக்கும் ஒரு முக்கியமான திட்டமாகும்.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு அருகில் அமையவுள்ள இந்த 27 மாடி கட்டிடம் தொடர்புகள், தற்போதைய வசதிகள் மற்றும் நிலையான பராமரிப்பு முறைகள் அனைத்தையும் இணைக்கும் வகையில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சென்னை சென்ட்ரல் கோபுரம், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்கள், ஆற்றல் திறன்மிக்க அமைப்புகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியது, நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கான முன்னோடியாக அமைந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் கோபுரம் ஒரு முக்கியமான செயல்பாட்டு மையமாக கருதப்படுகிறது. வணிகம், ஓய்வு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றுக்கு கவனமாக வடிவமைக்கப்பட்ட இடங்களை வழங்கும் இந்த கோபுரம், குடியிருப்பாளர்கள், பயணிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வருகை தரும் பார்வையாளர்களுக்கு ஒரு இணக்கமான சூழலை உருவாக்கும்.
அதன் அதிநவீன உள்கட்டமைப்பு நகரத்தின் இணைப்பு, பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சென்னை சென்ட்ரல் கோபுரம், வளர்ச்சி, புதுமை மற்றும் வாய்ப்புகளை குறிக்கிறது. இது நகரத்தின் லட்சியத்தையும் மாற்றத்தையும் குறிக்கும் ஒரு பெருமைமிக்க அடையாளமாக திகழ்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.