காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வரும் ஜுன் மாதம் தேர்தல் நடத்துவது என்று அன்மையில் நடந்த கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தியை, உடனடியாக கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் இதே போன்று தீர்மானம் நிறைவேறி உள்ளது.

அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முதல்-அமைச்சர் பூபேஷ் பாகெல், “ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும்” என தீர்மானம் கொண்டு வந்தார்.

சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி.எல்.புனியா, மாநில காங்கிரஸ் தலைவர் மோகன் மார்க்கம் ஆகியோர் இதனை முன் மொழிந்தனர்.

இந்த தீர்மானம் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

“ராகுல் காந்தியால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு வலிமை சேர்க்க முடியும்” என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

– பா. பாரதி