திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நிலவுக்கு அனுப்பப்பட இருந்த சந்திராயன் 2 விண்கலத்திற்கான கவுண்ட் டவுன் இஸ்ரோவால் நிறுத்தப்பட்டுள்ளது.

உலகில் முதன் முறையாக, நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய சந்திராயன் 2 என்கிற விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இன்று அதிகாலை 2:51க்கு விண்ணில் செலுத்த தயாராகி வந்தது. இந்த விண்கலம் மூலம், நிலவில் உள்ள கனிமவளங்கம், மக்கள் வாழ சாதகமான சூழல் உள்ள நிலை, தண்ணீர் இருப்பு போன்றவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டிருந்தது.

ஒரு மணி நேரத்திற்கு முன்பாக GSLVMkIII-M1 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்துவிட்டதாக இஸ்ரோ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென விண்கலத்தை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இஸ்ரோ, ராக்கெட்டை ஏவும் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும், இன்றைக்கு விண்கலம் ஏவப்படாது என்றும் தெரிவித்துள்ளது. அத்தோடு, விண்கலத்தை விண்ணில் செலுத்த, வேறு ஒரு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.