சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பத்துக்கு மத்தியில் கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.  இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று நிலவுவதால், இந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று (புதன்கிழமை) தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழையும், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளையும், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை மறுதினமும் (வெள்ளிக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

18-ந் தேதி (சனிக்கிழமை) நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

என அறிவிக்கப்பட்டுள்ளது.