ராஞ்சி: நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்  சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த நிலையில், மீண்டும் மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதற்காக  புதிய முதல்வர், சம்பை சோரன் தனது பதவியை ராஜினாமா  செய்துள்ளார். அதற்கான கடிதத்தை மாநில கவர்னரை சந்தித்து வழங்கினார்.

ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்த போது ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து அவரை அமலாக்கத்துறை சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. அதனால்  அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் . அதைத்தொடர்ந்து புதிய முதல்வராக சம்பை சோரன் பதவி ஏற்றார். சில மாதங்ள் சிறை வாசத்துக்கு, அவருக்கு  ஜார்க்கண்ட் நீதிமன்றம்  ஜாமீன் வழங்கிது. இதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில், ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் சம்பை சோரன் வீட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவராக  ஹேமந்த் சோரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து, தற்போதைய முதல்வர் சம்பை சேரன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார்.

சம்பை சோரன் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து கடிதம் வழங்கினார். இதையடுத்து விரைவில் ஜார்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரான் பதவியேற்க உள்ளார்.