சென்னை:  ராயப்பேட்டையில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோயிலின் ராஜகோபுரத்துக்கு சேதம் ஏற்படாத வகையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என மெட்ரோ நிர்வாகத்துக்கு  உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல ஆக்கிரமிப்பு உள்பட தேவைப்படும் இடங்கள் கையகப்படுத்தப்பட்டு, அவை இடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதன் காரணமாக சாலையோரங்களில்  இருந்த ஏராளமான கோயில்கள், ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை  ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலின் ராஜ கோபுரத்தை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்காக இடிக்க முடிவு செய்யப்பட்டது.

அரசின்   இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோயில் ராஜகோபுரத்தை இடிக்க தடை விதிக்க கோரியும் ஆலயம் காப்போம் கூட்டமைப்பின் தலைவரான பி.ஆர்.ரமணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து,  கடந்த  4ஆம் தேதி  நீதிபதி குமரேஷ்பாபு, ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில், ராஜகோபுரம் ஆகியவற்றையும், மெட்ரோ ரயில் பணிகளையும் நேரில் பார்வையிட்டு அந்த பகுதி மக்களிடம் விசாரித்தார். அப்போது பொதுமக்கள்  பழமை வாய்ந்த இந்த கோயிலை இடிக்கக்கூடாது என்று என்று வலியுறுத்தினார். மேலும், மெட்ரோ பணிகளை சற்று தள்ளி அமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் சுட்டிக் காட்டினர்.

இதைத்தொடர்ந்து,  இந்த வழக்கு நேற்று (ஆகஸ்ட் 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வு, “மெட்ரோ ரெயில் பணி 30 அடி ஆழத்தில் நடக்கும் போது ராஜ கோபுரம் பாதிக்கப்படும். எனவே கோபுரத்தை 5 மீட்டர் உள்புறம் தள்ளி வைத்துவிட்டு, பணிகள் முடிந்ததும் மீண்டும் பழை இடத்தில் வைக்க வேண்டும். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோயிலின் ராஜகோபுரத்துக்கு சேதம் ஏற்படாத வகையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ள வேண்டும்  மேலும், மெட்ரோ ரயில் பணி நடக்கும் போது விநாயகர் கோயில் இடிந்தால் மீண்டும் அதே இடத்தில் கோயில் கட்டி பாலாயம் பணியை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்ய வேண்டும். பக்தர்கள் வெளியே செல்லும் கோயிலின் நுழைவு வாயில் அருகே உள்ள காலி இடத்தில் ஏற்படுத்தி தர வேண்டும்” என்று மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.