மும்பை: பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர்  மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவரது படிப்பு மற்றும் விண்ணப்பம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் குழுவை மத்தியஅரசு ஏற்படுத்தி உள்ளது.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கர்  என்பவர் பயிற்சியில்  சேருவதற்கு முன்பே, தனக்கு  வீடு, கார் தேவை என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதாகவும், இது தொடர்பாக அவரது தந்தையும் அழுத்தம் கொடுத்தாகவும் கூறப்படுகிறது. மேலும்,  பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர்  சிவில் சர்வீஸ்  தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்றவர்.  இவர் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை பயன்படுத்தி வருவதாகவும், அரசின் விதிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், மருத்துவ பரிசோதனைகளுக்கு வர மறுப்பதாகவும்  குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இவர்,  தேர்வு செயல்பாட்டில் சலுகைகள் பெற அவர் தன்னை பார்வை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று குறப்பிட்டிருந்தாராம். ஆனால் அந்த குறைபாடுகளை உறதி படுத்த கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ சோதனைக்கான சம்மன்களை 5 முறை பெற்றுக்கொள்ள மறுத்த அவர், 6-வது சம்மனை ஏற்று பாதி சோதனையில் மட்டும் கலந்து கொண்டதாகவும், பார்வை இழப்பை மதிப்பிடுவதற்கான சோதனையில் அவர் பங்கேற்கவில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளது.

மேலும் சிவில் சர்விஸ் தேர்வு முகமையில் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக குடும்ப ஆண்டு வருமானம் இருப்பதாக சமர்ப்பித்து, கிரீமிலேயரில் இல்லை யென்பதற்கான சான்றிதழை பெற்று ஓ.பி.சி. பிரிவில் சலுகை பெறுவதற்கான சாதி சான்றிதழை சமர்ப்பித்ததாக புகார் கூறப்படுகிறது.  இதைத்தொடர்ந்து,  பூஜா கேத்கர் ஐஏஎஸ்-க்கு தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இதைப்போல பூஜாவின் தந்தை திலீப்கேத்கர் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அகமத் நகரில் வஞ்சித் பகுஜன்கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கப்பட்டார். அப்போது வேட்பு மனுத்தாக்கலின் போது தனக்கு ரூ.43 லட்சம் ஆண்டு வருமானம் இருப்பதாகவும், 40 கோடி சொத்து இருப்பதாகவும்  காட்டி இருந்தார்.  ரூ.40 கோடி சொத்து வைத்துள்ளவர் கிரீமிலேயரில் இல்லை என்று சான்று பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து,   பூஜாகேத்கர்  பணியிட மாற்றம் தொடர்பாக புனே கலெக்டர் விளக்கம் அளிக்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக பயிற்சி ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் பூஜாகேத்கர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா தலைமை செயலாளருக்கு சிவசேனா எம்.பி. மிலிந்த் தியோரா கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தகுதி மற்றும் நெறிமுறைகள் இல்லா தவர்கள் முக்கியமான பொதுப்பதவிகளை வகிக்க தகுதியற்றவர்கள் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே பூஜாகேத்கர் மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் குழுவை அமைத்து உத்தர விட்டுள்ளது.  தகுதிகாண் ஐஏஎஸ் அதிகாரியான பூஜா மனோர்மா திலீப் கேத்கரின் வேட்பு மனுக்கள் மற்றும் இதர விவரங்களைச் சரிபார்க்க மத்திய அரசு  நேற்று ( 11/07/24) அன்று  ஒற்றை உறுப்பினர் குழுவை அமைத்துள்ளது. அவர் ஒரு அரசு ஊழியராக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சர்ச்சையின் மையத்தில் காணப்பட்டார். மத்திய அரசின் கீழ் கூடுதல் செயலர் அந்தஸ்தில் உள்ள மூத்த அதிகாரி தலைமையில் இந்த குழு செயல்பட்டு வருவதாகவும், அதன் அறிக்கையை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கும் என்றும் மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பணியில் சேருவதற்கு முன்பே கார், வீடு தேவை என மாவட்ட ஆட்சியரை மிரட்டிய பயிற்சி ஐஏஎஸ் பெண் அதிகாரி….