டெல்லி

ன்று மத்திய அமைச்சரவை சந்திரயான் 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார். அதன்படி, இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதில் குறிப்பாக ‘சந்திரயான்-4’ திட்டத்தின் மூலம் இந்தியா மீண்டும் நிலவுக்கு செல்ல இருப்பதாகவும், இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ந்தேதி, ‘சந்திரயான்-3’ திட்டத்தின் கீழ் ‘விக்ரம்’ லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் தொடர்ச்சியாக ‘சந்திரயான்-4’ விண்கலத்தை நிலவுக்கு இந்தியா அனுப்ப இருக்கிறது.

இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கிவிட்டு, அங்கிருந்து மாதிரிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.20,193 கோடி செலவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் அடுத்தகட்ட பணிகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

தவிர, ‘சந்திரயான்-4’ திட்டத்தின் நீட்சியாக வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான ஆர்பிட்டர் மிஷன் திட்டத்தை ரூ.1,236 கோடியில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2028 மார்ச் மாதத்தில் வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் திட்டத்தின்படி, சர்வதேச விண்வெளி மையத்தின் முதற்கட்ட அலகுகளை கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.