டெல்லி

ரூ. 176 லட்சம் கோடியாக மத்திய அரசின் கடன் தொகை உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் கடன்தொகை 2024 – 2025 ஜூன் காலாண்டின் இறுதியில் ரூ.176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மத்திய அரசின் கடன் 141 லட்சம் கோடியாக இருந்தது தற்போது 25 சதவீதம் உயா்ந்துள்ளது. மத்திய அரசின் மொத்த கடனில் ரூ.9.78 லட்சம் கோடி வெளிநாட்டு கடன் மதிப்பாகும். இந்த தொகை கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ.8.50 லட்சம் கோடியாக இருந்தது.

அதே நேரத்தில், உள்நாட்டுக் கடன் தொகையில் அரசின் பத்திரங்கள் மூலம் ரூ.104.5 லட்சம் கோடியும், குறுகிய கால சேமிப்பின் பாதுகாப்பு பத்திரங்கள் மூலம் ரூ.27 லட்சம் கோடியும், கருவூல பத்திரம் (டி பில்கள்) மூலம் ரூ.10.5 லட்சம் கோடியும், தங்க பத்திரங்கள் மூலம் ரூ.78,500 கோடியும் நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் நிா்ணயிக்கப்பட்ட ரூ.14.1 லட்சம் கோடி கடன் தொகையில் ரூ.6.61 லட்சம் கோடியை கடனாக பெறுவதற்கான திட்டங்களை நேற்று முன்தினம் நிதி அமைச்சகம் தெரிவித்தது. மொத்த வருவாயில் 19 சதவீதத்தை கடனுக்கான வட்டியாக மத்திய அரசு செலுத்தி வருகிறது. அதன்படி, இந்த நிதியாண்டில் ரூ.11.6 லட்சம் கோடியை மத்திய அரசு வட்டியாக செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.