டெல்லி
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முதல் முறை பணிக்கு செல்வோருக்கு மாதம் ரூ/ 15000 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-25 பட்ஜெட்டில் உற்பத்தி துறையில் சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டில் 3½ கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்க ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஊக்கத்தொகைகளை வழங்கும்.இந்தத் திட்டத்தின் கீழ், முதல் முறையாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாத ஊதியம் ரூ.15,000 வரை கிடைக்கும் அதேபோல், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும், உற்பத்தித் துறைக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகளும் வழங்கப்படும்.
மத்திய அமைச்சரவை ரூ.1 லட்சம் கோடி செலவில் அமல்படுத்தப்படவுள்ள, முதல் முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்கும் 5 திட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.