நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்தார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் தெறி, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களின் பாடல்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த பாடல்களின் உரிமையை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் பெற்றுள்ளதாகவும், அதற்கான காப்புரிமையை நோவெக்ஸ் கம்யூனிகேசன் என்ற நிறுவனம் பெற்றுள்ளது.

சட்டப்படி பாடல்களை காப்புரிமை பெற்றுள்ள நிறுவனத்திடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தக் கூடாது என்பதால், மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்காததால் சிபிசிஐடியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை குற்றத் தடுப்பு பிரிவில் நோவெக்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

காப்புரிமை சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழ் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் மீது அறிவுசார் சொத்துரிமை குற்றத் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.