சைபராபாத்

பிரபல நடிகர்கள் 25 பேர் மீது  தெலுக்கானாவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்திய தெலுங்கு நடிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் மீது சைபராபாத் போலீசார் புகார் அளித்துள்ளார்.

புகாரில்,

 “தன்னுடைய காலனியைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசும்போது, சினிமா பிரபலங்கள், சமூக வலைத்தள பிரபலங்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தும் சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்து இருக்கிறார்கள்.  இந்த சூதாட்ட செயலிகளில் பலரும் பணத்தை இழந்துள்ளனர். நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

சமூக வலைதளங்களில் பிரபலங்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளை விதிகளை மீறி விளம்பரப்படுத்துகிறர்கள்.இதனால் பணத்தேவை உடையவர்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றப்படுகிறார்கள். இதை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் பெரிய அளவில் தொகையை பெற்றுக்கொள்கிறார்கள். எனவே சட்ட விரோதமாக இந்த செயலிகளை பிரபலப்படுத்தும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”

என்று அவர் கூறியிருந்தார்.

சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேர் மீது சைபராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு தெலுங்கு திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் உள்பட 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.