கோவை:
கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதியன்று கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபரரான ஜமேஷா முபீன் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் சிதறியதாக கூறப்பட்டது. பின்னர் அதில் கிடைக்கப்பெற்ற தடங்கள் மூலம் அது கார் குண்டு வெடிப்பு என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வெடிகுண்டு வழக்கை என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. கார் வெடிப்பில் உயிரிழந்த நபர், உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் முபினக்கு ஆதரவாக செயல்பட்ட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சென்னை, கோவை உக்கடம் அடுத்த புல்லுக்காடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்பட சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.யொட்டி, அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.