லண்டன்:

பிரிட்டனில் வசிக்கும் சீக்கிய ஜோடியான சந்தீப் மற்றும் ரீனா மந்தருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. பல முறை கருத்தரித்தும் பலனளிக்கவில்லை. பல சிகிச்சை முறைகளை நாடியும் குழந்தை பிறப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்பது உறுதியானது.

இந்தியாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் இவர்கள் பிறந்தது பிரிட்டனில் தான். குழந்தை பிறக்காத ஏ க்கத்தில் இருந்த இந்த இந்த ஜோடி ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர். இதற்காக குழந்தை தத்துகொடுக்கும் ஒரு முகமையை நாடினர்.

ஆனால், இவர்களுக்கு வெள்ளை நிறத்தில் உள்ள குழந்தைகளை தத்துக் கொடுக்க இயலாது என்றும், இ ந்திய பாரம்பரியம் கொண்டிருப்பதால் அவ்வாறு தர முடியாது என்று அந்த முகமை மறுத்துள்ளது. பிரிட்டன் நாட்டினர் அல்லது ஐரோப்பர்களுக்கு மட்டுமே வெள்ளை நிற குழந்தைகளை தத்துக் கொடுக்க முடியும் என்று தெரிவித்துவிட்டது.

இதனால் அந்த இளம் ஜோடி அதிர்ச்சியடைந்தது. இந்த விவகாரம் பிரிட்டன் மீடியாக்களில் வெளியானதை தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தத்து கொடுப்பதற்கு குழந்தையின் இனம் ஒரு பொருட்டு கிடையாது என்று அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து சந்தீப் மந்தீர் கூறுகையில், ‘‘தத்தெடுக்கும் குழந்தைக்கு பாதுகாப்பான, அன்பான இல்லம் இருக்கிறதா என்பதை தான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தியர், பாகிஸ்தான் என்ற கலாச்சார பாரம்பரியத்தை காரணமாக கூறுவது சரியல்ல’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,‘‘ இந்த விவகாரம் பிரதமர் தெரசா மே கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அவரது அலுவலகத்தில் இருந்து கடிதங்கள் எழுதப்பட்டது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. பிரதமர் பல முறை கடிதம் எழுதியும், குழந்தை நல அமைச்சர் தலையிட்டும் எதுவும் நடக்கவில்லை. இதன் பின் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க எங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

இதை எதிர்த்து தம்பதியர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். பிரிட்டனில் உள்ள குழந்தை தத்து கொடுக்கும் முகமைகள் குழந்தையின் இனத்தோடு ஒத்துப்போகும் பின்னணி கொண்ட பெற்றோருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் நடைமுறை உள்ளது. இந்த இளம் தம்பதியரின் சட்ட போராட்டத்திற்கு உதவப்ப டும் என்று சமத்துவம் மற்றும் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆணைய தலைவர் டேவிட் ஐசக் கூறுகையில், ‘‘ அன்பான குடும்த்திற்காக பல குழந்தைகள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு சந்தீப் மற்றும் ரீனா தம்பதியர் சிறந்த வாழ்க்கையை அமைத்து கொடுக்க தயாராக உள்ளனர். அவர்களுக்கு கலாச்சார பாரம்பரியத்தை காரணம் கூறி நிராகரிப்பது தவறு’’ என்றார்.