சென்னை:   பொத்தேரி அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில்  கஞ்சா நடமாட்டம் உள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில் விடுதியில் போதை பொருட்கள் மறைத்து வைத்திருந்ததாக 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் உள்பட பல பகுதிகளிலும் போதை பொருட்கள் நடமாட்டம் காணப்படுகிறது. அதுபோல போதை தரும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களும், கஞ்சா சாக்லெட் உள்பட போதை சாக்லெட்டுகளின் விற்பனையும் கொடி கட்டி வருகிறது. இதனால்,  கொலை கொள்ளை உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக விடுதிகள் மற்றும் தனியார் விடுதிகளில் தங்கி படுத்தி வரும்  கல்லூரி மாணவர்களிடம் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கல்லூரிகளிலும் பாலியல் சம்பவங்கள் உள்பட பல்வேறு முறைகேடுகள் அரங்கேறி வருகின்றனர். இதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில்,  செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் (எஸ்ஆர்எம்)  இன்று காலை சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கல்லூரியில்  தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெரும் பணக்காரர்களின்  மாணவர்களும் நைஜீரியா, மலேசியா, இந்தோனேசியா இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்களும் அங்குள்ள விடுதிகளில்  தங்கி படித்து வருகின்றனர். இதனால் அங்கு போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடி வருவதாக குற்றச்சாட்டக்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  இன்று அதிகாலையிலேயே திடீரென இந்த கல்லூரி வளாகத்தில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியே பரபரப்பானது. இதனையடுத்து தனியார் கல்லூரியில் சுற்றியுள்ள வீடுதிகளில் சுமார் 500 போலீசார்  அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும் அடுக்குமாடியில் குடியிருக்கும் நபர்கள் மற்றும் இருசக்கர வாகனம் வைத்திருந்தாலும் அதிலும் என்னென்ன வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டது மேலும் வெளி நபர்கள் உள்ளே செல்லும் போது அவர்கள் என்ன வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பாக சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையின்போது, மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் சிக்கின. இதன் காரணமாக அந்த  கல்லூரியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.