ராச்சி

பாகிஸ்தான் நீர்வள ஆய்வுத்துறை கவுன்சில் வரும் 2025க்குள் பாகிஸ்தான் நீர்நிலைகள் முழுவதுமாக வரண்டுவிடும் அபாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.   அங்கு நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.   இதே போல நாடெங்கும் மழை அளவும் குறைந்து வருகிறது.   இது பற்றி பாக் நீர்வள ஆய்வுத்துறை கவுன்சில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்படுவதாவது :

”தற்போது மழை அளவு வருடா வருடம் குறைந்து வருவது தெரிந்ததே.  நாட்டின் முக்கிய நதியான சிந்து நதியில் இதனால் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.   இந்த நிலை இன்னும் தொடருமானால் மேலும் வறட்சி ஏற்படும்.  பாகிஸ்தானின் பல இடங்களில் மக்கள் குடிநீருக்காக வெகு நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.

பாகிஸ்தானின் நீர்வளக் கொள்கை பணக்காரர்களுக்கும் நில உரிமையாளர்களுக்கும் மட்டுமே நீர் கிடைக்கும்படி அமைந்துள்ளது.  ஏழைகளுக்கு அது எட்டாக் கனியாகவே உள்ளது.  1960ல் இருந்து இன்று வரை பாகிஸ்தானில் எந்த ஒரு அணையும் கட்டப்படவில்லை.   எனவே நீர் சேகரிப்பு அடியோடு நின்று போய் விட்டது.   இப்போதுள்ள அணைகளில் நீர் சேகரித்தால் அது நாடு முழுமைக்கும் சுமார் 30 நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவில் இருக்கும்.

அமைச்சர்களும் அதிகாரிகளும் லஞ்சம் மற்றும் ஊழலில் காட்டும் கவனத்தில் நீர்வளத்தில் காட்டுவதில்லை.    நாட்டில் உள்ள ஆறுகளில் உள்ள நீரில் சுமார் 90% நீர் மனித பயன்பாட்டுக்கு உகந்தவை அல்ல.  சமீபத்தில் கராச்சி நகரில் அளிக்கப்படும் குடிநீரில் மனிதக் கழிவுகள் மிகவும் காணப்பட்டது வருந்தத் தக்கது.

அரசு உடனடியாக நீர் வளத்தை பெருக்க ஆவன செய்ய வேண்டும்.  தவறினால் வரும் 2025க்குள் நாட்டில் உள்ள நீர்நிலைகள் முழுவதுமாக வரண்டு விடும்.   எனவே அரசின் துரித நடவடிக்கை அவசியமான ஒன்று “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.