தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இனிமேல் சென்னை அல்லது தமிழ்நாட்டுக்குள் எங்காவது நடத்த வேண்டும் என்று சிபிஐக்கு கடிதம் எழுதி கேட்டுள்ளார். வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் (ஏப்ரல் 23) தொடர்பான பணிகள் காரணமாக டெல்லிக்கு வருவது சிரமமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மார்ச் 14ஆம் தேதி விசாரணை அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், முன்னதாக ஜனவரி 12 மற்றும் ஜனவரி 19 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானதாக விஜய் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தின் நகல், கரூர் கூட்டநெரிசல் விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் நியமித்துள்ள நீதிபதி அஜய் ரஸ்தோகிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பின்னர், மார்ச் 5ஆம் தேதி மற்றொரு நோட்டீஸ் அனுப்பி மார்ச் 10ஆம் தேதி டெல்லியில் ஆஜராக சிபிஐ கேட்டதாகவும் விஜய் கூறினார். அதற்கு பதிலாக, 10 முதல் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், விசாரணையை சென்னை அல்லது தமிழ்நாட்டில் எங்காவது நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்ததாக தெரிவித்தார்.

ஆனால், விசாரணை அதிகாரி மீண்டும் மார்ச் 15ஆம் தேதி டெல்லியில் ஆஜராக அறிவிப்பு அனுப்பியதாகவும், சட்டத்தை மதிக்கும் குடிமகனாக அதன்படி தானும் டெல்லிக்கு சென்று விசாரணைக்கு ஆஜரானதாகவும் விஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சிபிஐ அதிகாரிகள் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விஜயிடம் விசாரணை நடத்தினர். மாலை சுமார் 6.30 மணியளவில் அவர் வெளியேற அனுமதி வழங்கப்பட்டது. இதுவரை விஜய்க்கு புதிய சம்மன் எதுவும் அனுப்பப்படவில்லை என்று அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரூர் சம்பவம் குறித்து தனது கடிதத்தில், “இந்த கூட்டநெரிசல் விபத்தில் நானும் என் கட்சி உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டவர்களே. பலர் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் எங்களை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த நாங்கள் உண்மையான முயற்சிகள் செய்தோம்” என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கட்சி கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது போன்ற பணிகளில் பிஸியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கரூர் கூட்டநெரிசல் வழக்கு அரசியல் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இந்த வழக்கில் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. மார்ச் 17ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் வந்துள்ளதாக அவர் உறுதி செய்துள்ளார்.

அதேவேளையில், இந்த சம்மன் திமுகவை அச்சுறுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்று திமுக அமைச்சர் ஒருவர் குற்றம்சாட்டியிருப்பது இந்த வழக்கு அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]