சென்னை: கள்ளக்குறிச்சி  கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்குத் தேவையான கூடுதல் பேருந்து வசதிகளை நான்கு வாரங்களில் செய்து கொடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த பகுதியில் கள்ளச்சாராயம் பெருக காரணம், அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் குறித்து ஆய்வு செய்தது.

கள்ளக்குறிச்சி பகுதியில்  கல்வராயன் மலைப் பகுதி மக்களின் சமூக, பொருளாதார மேம்பாடு தொடர்பாக  விசாரணை நடத்திய   சென்னை உயர் நீதிமன்றம், அந்தப் பகுதியில்  அரசு மேற்கொண்டு வரும் பணிகள், மக்களுக்கான பேருந்து சேவைகள் உள்பட பல்வேறு வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்தது.

இதைத்தொடர்ந்து கடந்த விசாரணையின்போது, கல்வராயன் மலை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதிகள் குறித்து கேள்வி எழுப்பியது. மேலுமை, அந்த பகுதிகளுக்கு  போக்குவரத்து ஏற்பாடுகள் செய்வது  குறித்து சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர்கள் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர்கள் காணொலியில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

அப்போது, சேலம் கோட்டம் சார்பில் கல்வராயன் மலைப் பகுதியில் தற்போது இரண்டு மினி பேருந்துகளும், விழுப்புரம் கோட்டம் சார்பில் 10 பேருந்துகளும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, விழுப்புரம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் போதுமான அளவில் இல்லை எனக் கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில்  தமிழ்நாடு அரசு,  லாபத்தைக் கருத்தில் கொள்ளாமல் கூடுதல் மினி பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும், அப்போது தான் அந்தப் பகுதி மக்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் பயனடைவர் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், கல்வராயன் மலைப் பகுதிக்கு தேவையான பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.