விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள் உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன.

இந்த பொருட்கள் அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போது வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் ஆன, திமிலுடன் கூடிய காளை உருவம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. மேலும் முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் அகழாய்வில் கிடைத்து வருவதாகவும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.