லக்னோ: “மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வரவேற்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறி உள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த 33 சதவீத இட ஒதுக்கீட்டை, அதனைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க தாமதத்தையும் பொருட்படுத்தாமல், பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) தலைவர் மாயாவதி வரவேற்றார். பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (OBC) சேர்ந்த பெண்களுக்கு, இந்த இட ஒதுக்கீட்டிற்குள்ளேயே தனி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டாலும் கூட, இந்த மசோதாவிற்குத் தனது கட்சியின் ஆதரவு உண்டு என்று அவர் உறுதியளித்தார்.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. 2029-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்துவதற்குமான மசோதாவை கொண்டுவரும் பொருட்டு இந்த சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு கட்சிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்த மசோதாவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் செய்தியாளர்களுடன் பேசிய மாயாவதி, வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் பெண்களுக்குச் சமத்துவத்தையும் சுயமரியாதையையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், ‘இந்து சட்ட மசோதா’வின் வாயிலாக அவர்களுக்கு வலுவான சட்ட உரிமைகளையும் வழங்க டாக்டர் அம்பேத்கர் முயன்றார்.
அப்போதைய காங்கிரஸ் அரசு, குறுகிய சாதிய மனப்பான்மையால் அந்த மசோதாவை ஏற்க மறுத்தது. பின்னர், அதனைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து நிறைவேற்றியது. இதன் விளைவாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBCs) இடஒதுக்கீடு வழங்கப்படாததற்கும் பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம், மேம்பாட்டிற்காக எவ்வித உறுதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படாததற்கும் எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் அம்பேத்கர், சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.
அந்த வகையில் மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை எங்கள் கட்சி வரவேற்கிறது. இருப்பினும் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதையே எங்கள் கட்சி எப்போதும் ஆதரித்து வருகிறது. அதேவேளையில், 33 சதவீத இடஒதுக்கீட்டையும் எங்கள் கட்சி வரவேற்கிறது. இது ஒரு சிறிய எண்ணிக்கையாக இருக்கலாம். ஆயினும் இது ஒரு தொடக்கம், இதை நாங்கள் வரவேற்கிறோம். 50 இல்லாவிட்டாலும், 33 போதுமானது வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.
[youtube-feed feed=1]