சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இதுகுறித்து,   மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் உடனே நீதிமன்றத்தில் ஆஜராக  உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தின்  விற்பனைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் முறையீடு செய்தார். இதுகுறித்து விசாரித்த தலைமை நீதிபதி,   பொறுப்பில் இருக்கும் நீதிபதி குறித்து இப்படி பேச எப்படி அனுமதிக்க முடியும்?  என கோபத்துடன் கேள்வி எழுப்பியதுடன், இதுகுறித்த விசாரணைக்கு, இன்று பிற்பகல் 2.15 மணிக்கு  மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடக்கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன், அதுகுறித்து மலை உச்சிக்கே சென்று நேரடி ஆய்வு செய்ததுடன், அதற்கான ஆவனங்களையும் ஆய்வு செய்து, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இதை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு மறுத்து விட்டது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது. நீதிபதியை அவமதிக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியிர், டிஜிபிக்கள் செயல்பட்டதால்,  அவர்களை நேரில் வரவழைத்து கண்டித்த நீதிபதிகள், இதுபோன்ற நிலை உருவானதால், ஆட்சிக்கே சிக்கலாகிவிடும் என்று எச்சரித்தார்.

இந்த விவகாரத்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. நீதிபதிமீதும் அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டன.  மேலும், நாடாளுமன்றத்திலும்,அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீர்மானம் கொண்டுவந்தன. இது நாடு முழுவதும் உள்ள நீதித்துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினால், அவர்களை பதவி நீக்கம் செய்ய கோருவது எதன் அடிப்படையில் என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கிடையில், நாளை (ஜனவரி 8) தொடங்கவிருக்கும்  சென்னை புத்தகக் காட்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதனை அவமதிக்கும் வகையிலான புத்தகம் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் பரவின. இதுபரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, மத்திய உள்துறை செயலருக்கு பாஜக கடிதம் அனுப்பியது. பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்  மத்தியஅரசுக்கு  அனுப்பி உள்ள கடித்தில்,  ”சென்னை நந்தனத்தில் ஜன.8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியில் ‘கீழைக்காற்று’ பதிப்பகம் சார்பில் “திருப்பரங்குன்றம் விவகாரம் -ஜி.ஆர்.சுவாமிநாதன்: நீதிபதியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ரவுடியா?” என்ற தலைப்பிலான புத்தகம் காட்சிப்படுத் தப்பட உள்ளது.

அந்த புத்தகத்தின் அட்டைப்படத்தில், நீதிபதி ஒரு கையில் சூலத்தையும், மறு கையில் காவிக் கொடியையும் ஏந்தியிருப்பது போன்ற கேலிச் சித்திரம் இடம் பெற்றுள்ளது. இந்த பதிப்பகத் துக்கு அரங்கு எண் 172 மற்றும் 173 ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

நீதித் துறையின் சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் சீர்குலைக்கும் வகையில் இந்த புத்தகம் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, திருப் பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை பொறுத்துக்கொள்ள முடியாமல், தீய எண்ணத்துடன் இந்த அவதூறு பரப்பப் படுகிறது. இது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்லாமல், இந்திய நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் செயலாகும்.

எனவே, சம்பந்தப்பட்ட கீழைக் காற்று பதிப்பகம் மற்றும் தொடர்புடையவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவதூறு பரப்பும் அந்த புத்தகத்தின் விற்பனை மற்றும் விநியோகத்தை உடனடியாகத் தடை செய்வதோடு, அந்த பதிப்பகத்தின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த நிலையில்,  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதிக்க கோரி தலைமை நீதிபதி முன்பு வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் முறையீடு செய்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய தலைமை நீதிபதிமணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா,  பொறுப்பில் இருக்கும் நீதிபதி குறித்து இப்படி பேச எப்படி அனுமதிக்க முடியும்?  என தமிழ்நாடு அரசு மீது அதிருப்தி தெரிவித்துடன், இதுகுறித்து, இன்று பிற்பகல் 2.15 மணிக்கு  மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள்  ஆஜராக வேண்டும் என   தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

[youtube-feed feed=1]