டில்லி

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்க உள்ளது.

நேற்று டில்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தெங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். அப்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திர குமார் தெரிவித்துள்ளார்.

ரவீந்திர குமார் செய்தியாளர்களிடம்,

“பாஜக, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜன சேனா ஆகிய கட்சிகள் மக்களவை தேர்தலில் கொள்கை அடிப்படையில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன” 

என்று தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் போது ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாணும் உடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் இந்த ஆண்டு ஒரே சமயத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன