கோவை: தமிழ்நாட்டில் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் வளர்ச்சி  ஏற்பட உள்ளது”   என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா  நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பாக “INVESTOPIA GLOBAL” முதலீட்டாளர்கள் கருத்தரங்க மாநாடு  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில்  நடைபெற்றது.   இதில்,  பல ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மேலும்,  தமிழ்நாடு  தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஐக்கிய அரபு அமிரக நாட்டின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் அல்தாப் அல் மரி, ஐக்கிய அரபு அமிரக நாட்டின் தொழில்முனைவோர் மற்றும் SME மாநில அமைச்சர் அலியா அப்துல்லா அல் மஸ்ரூயி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பேசிய  அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,  “நாட்டை வலிமைப்படுத்த அதிக சக்தி வாய்ந்த என்ஜினாக தமிழ்நாடு திகழ்கிறது. 1100-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், மருத்துவர்களை தமிழ்நாடு உருவாக்குகிறது. மூன்றாவது முறையாக இந்தியாவில் ஐக்கிய அரபு அமீரக நாட்டு உடனான இது போன்ற சந்திப்பு நடைபெறுகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த காலணிகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களை கொண்டுள்ளது. 1800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா – ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு இடையேயான வணிகம் தென் இந்தியாவில் இருந்துதான் தொடங்கியது. தமிழகத்தில் இருந்து 30% சதவீத எலக்ட்ரானிக் சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் அதிக புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கி வருகிறது. இந்த மாநாட்டின் மூலம் நிறைய நல்ல முடிவுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்.

தமிழ்நாடு திறமை, அறிவின் தலைநகரமாக விளங்குகிறது. தொழில் தொடங்க தேவையான அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளது. வேளாண் உற்பத்தியில் சிறப்பாக செயல்படும் தமிழகம், மதிப்பு கூட்ட பொருட்களாக மாற்றுவதில்லை.” என்றார்.

பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய  டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது, “இதற்கு முன்பு துபாயில் ஒரு நிகழ்வில் ஐக்கிய அரபு அமிரக பொருளாதர அமைச்சரை சந்தித்த போது அவரை சென்னைக்கு அழைத்து ஒரு முதலீட்டாளர் மாநாடு நடத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இன்று இந்த மாநாடு நடைபெறுகிறது. நாளை முதலமைச்சரை ஐக்கிய அரபு அமீரக பொருளாதார துறை அமைச்சர் சந்தித்து பேச இருக்கிறார். முதலீடுகள் குறித்து பல பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே பல புதிய முதலீடு ஒப்பந்தகள் நடைபெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது. தமிழ்நாடு தற்போது தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. இதில் UAE-யும் சேர்ந்தால் தமிழ்நாட்டில் வளர்ச்சி இன்னும் பிரகாசமாக இருக்கும். இதன் மூலம் மிகப்பெரிய வேலைவாய்ப்புகள் உருவாகும். பல்வேறு முதலீட்டாளர்கள் அங்கிருந்து வந்துள்ளனர். இந்த மாநாடு முழுமையாக முடிந்த பிறகுதான் இந்த மாநாட்டின் மூலம் எவ்வளவு முதலீடுகள் வர போகிறது என்பது குறித்த விவரங்கள் தெரியவரும். வெறுமனே இத்தோடு முடிந்து விடமால் இதனை தொடர்ந்து பின்தொடர வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி ஒரு குழுவும் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் சாதனங்களில் 30 சதவீதம் தமிழகத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து சென்ற ஆண்டு 9 பில்லியன் டாலர் என்று இருந்த எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ஏற்றுமதி, இந்த ஆண்டு 12 பில்லியன் டாலர் ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும்.

இந்த முறை மேலும் பல புதிய எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனங்கள் வர உள்ளது. அந்த நிறுவனங்கள் வந்த பிறகு மிகப்பெரிய எலெக்ட்ரானிக்ஸ் வளர்ச்சி தமிழகத்தில் ஏற்பட உள்ளது. இதன் மூலம் தமிழக அரசுக்கு நல்ல வருமானம் மற்றும் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளது.

இவ்வாறு கூறினார்.