டெல்லி: பிரதமர் மோடி விண்வெளி செல்லும் முன், மணிப்பூர் செல்ல வேண்டும்  என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்தில்  தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் ககன்யான் திட்டம் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். அப்போது,  செய்தியாளள்,   ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அனுப்புவீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய சோம்நாத்,   பிரதமரை விண்வெளிக்கு அனுப்புவதில் எங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை என்று கூறியதுடன்,  ககன்யான் திட்டத்தின் பாதுகாப்புத் தன்மை ஆராய்ந்து உறுதி செய்யப்பட்ட பிறகே முக்கிய பிரமுகர்களை இந்த திட்டத்தில் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல முடியும்  என்பதையும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.  இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் பேட்டியை சுட்டிக்காட்டி,  தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள ஜெய்ராம் ரமேஷ்,  அதில்,  “விண்வெளிக்கு செல்லும் முன், ‘நான் – பயலாஜிகல்’ பிரதமர் என கூறிய பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ககன்யான் திட்டத்தின் முதல் பயணம் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், முதல் பயணத்தை மேற்கொள்ளவுள்ள குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய நான்கு பேரையும் பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்பு நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.