மும்பை: ஏற்கனவே திட்டமிட்டபடி மார்ச் 29ம் தேதி ஐபிஎல் போட்டியைத் துவக்க முடியாத நிலையில், அப்போட்டிக்கான 8 மாறுபட்ட அட்டவணைகளை வழங்கியுள்ளது பிசிசிஐ.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஐபிஎல் தொடரை திட்டமிட்டபடி தொடங்க முடியவில்லை. இந்நிலையில்தான் 8 வேறுபட்ட ஐபிஎல் காலண்டர்கள் பிசிசிஐ சார்பாக வழங்கப்பட்டுள்ளன.

புதிய திட்டத்தின்படி, அனைத்து ஐபிஎல் போட்டிகளும் ஐந்து முதல் ஆறு இடங்களில், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதல் பெற்ற பிறகே நடத்தப்படும்.

வழங்கப்பட்டிருக்கும் மாறுபட்ட தேதிகளில், ஏப்ரல் 16ம் தேதிதான் முதல்நிலை சாத்தியமுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தேதியில் தொடங்கும் போட்டிகள், மே மாதம் இறுதிவரை நடத்தப்படும்.

மேலும், ஏப்ரல் 16 சாத்தியப்படவில்லை என்றால், ஏப்ரல் 20ம் தேதி போட்டியைத் தொடங்கி, மே மாதம் கடைசித் தேதியில் போட்டியை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேசமயம், மே மாத துவக்கம் வரை, ஐபிஎல் தொடர் துவங்கவில்லை எனில், ஆட்டங்கள் அதிகம் குறைக்கப்பட்டு 31 நாள் தொடராக ஐபிஎல் திருவிழா நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.